Monday 27 August 2012

செப்டம்பர் ,அக்டோபர் மாதங்களில் திரைக்கு வரும் தமிழின் பிரம்மாண்ட படங்கள்




தமிழ் சினிமாவில் நிறைய எதிர்பார்ப்புகளை கொண்ட திரைப்படங்கள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவரவிருக்கின்றன. பெரிய ஹீரோக்களின் படங்களும் திரைக்கு வரவிருப்பதால் இப்படங்கள் வெளியாகும் தேதிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.



நமக்குத் தெரிந்த தகவலின்படி அப்படங்கள் வெளியாகும் தேதிகளை யூகங்களின் அடிப்படையில் இங்கே குறிப்பிட்டுள்ளோம். அவை வருமாறு,
நடிகை பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருக்கும் படம் ‘சாருலதா’. இப்படத்தை பொன்.குமரன் என்பவர் இயக்குகிறார். சூர்யாவின் ‘மாற்றான்’ படத்திற்கு இணையாக போட்டி போடும் இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தை செப்டம்பர் 7-ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நடிக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்’. இப்படத்தை சசிகுமாரின் உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றியைத் தரும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை செப்டம்பர் 14-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
பீட்சா கடையில் வேலை செய்யும் இளைஞனுக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் ‘பீட்சா’. இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்குகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருப்பதால் வரும் செப்டம்பர் 21-ல் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விக்ரம், அனுஷ்கா நடிப்பில் விஜய் இயக்கி வெளிவந்த ‘தெய்வத்திருமகள்’ படத்திற்கு பிறகு, மூன்று பேரும் மறுபடியும் கைகோர்த்திருக்கும் படம் ‘தாண்டவம்’. இப்படத்தில் பல காட்சிகள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளன. இசை வெளியீட்டை சமீபத்தில் முடித்திருக்கும் இந்த படத்தினை வரும் செப்டம்பர் 28-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வரூபம்’. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்ட இப்படத்தை கமல்ஹாசனே இயக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரே பிரம்மாண்டமாக இருந்த பட்சத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. இப்படத்தை அக்.12-ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

பாலா இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் படம் ‘பரதேசி’. பாலா படங்களிலேயே மிகக் குறைந்த நாளில் முடிக்கப்பட்ட படம் என பெயர் பெற்றிருக்கிறது. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். பாலா படத்தில் நடிக்கும் ஹீரோ எப்பொழுதும் அவருடைய உண்மையான தோற்றத்தில் நடிப்பதில்லை. அதுபோல் இப்படத்தில் நடிக்கும் அதர்வாவின் தோற்றம் என்னவென்றே அறிய முடியவில்லை. ஆகவே, அவரது தோற்றம் எப்படியிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்.19-ல் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படமும், சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படமும், கார்த்தி நடிப்பில் சுராஜ் இயக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment