Thursday 9 August 2012

கன்னடத் தயாரிப்பாளரின் படத்தில் விஜய்!



         பிரபல கன்னட திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.மஞ்சு முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வருகிறார். அதில் நாயகனாக நடிக்கப் போகிறார் விஜய்.

பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் இதைத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார், ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டார். அதில் விஜய்யும் கலந்து கொண்டார். அப்போது தமிழில் நேரடிப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார் புனீத். இந்த நிலையில், கன்னடத் தயாரிப்பாளர் ஒருவரின் தமிழ்ப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் புனீத்தும் இடம் பெறுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கன்னடத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர் கே.மஞ்சு. தமிழ்ப் படங்கள் பலவற்றை கர்நாடகத்தில் விநியோகிக்கும் உரிமையைப் பெற்றிருப்பவர் இவர். லேட்டஸ்டாக இவர் வாங்கிய படம் பில்லா 2. அதற்கு முன்பு விஜய்யின் வேலாயுதம் படத்தையும் இவர் வாங்கி விநியோகித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம் மஞ்சு.

விஜய்யின் காவலன் பட ரிலீஸின்போது விஜய்யை பெங்களூருக்கு வரவழைத்து, அவரை கன்னடத்தில் பேச வைத்து கன்னட மீடியாக்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய்க்குப் பெரும் பெயர் வாங்க முக்கியக் காரணமே மஞ்சுதான். மேலும் விஜய்க்கும், மஞ்சுவுக்கும் இடையே நல்ல நட்பும் இருக்கிறதாம். இதனால் மஞ்சு தன்னை அணுகியபோது உடனே ஓகே. சொல்லி விட்டாராம் விஜய்.

இதுகுறித்து மஞ்சு கூறுகையில், ஆரம்ப கட்ட அளவில் பேச்சுக்கள் உள்ளன. விஜய் சாருடன் பேசியுள்ளேன். நல்ல கதையைக் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதுதொடர்பாக தற்போது தீவிரமாக பேசி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் எல்லாம் முடிவாகி விடும் என்றார்.

அதேசமயம், விஜய் படத்தை தயாரிப்பதற்கு முன்பு இன்னொரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கும் திட்டமும் மஞ்சுவிடம் உள்ளதாம். இதை இயக்கப் போவது சசிக்குமாராம். ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம். விரைவில் இது தொடங்குமாம். தமிழ், கன்னடம், தெலுங்கு எனமூன்று மொழிகளில் இது நேரடியாக தயாராகிறதாம்.

No comments:

Post a Comment