நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஸ்ரீதேவி, தற்போது தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன், என்றார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?, என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீதேவி, நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment