Tuesday 9 October 2012

எனது ரமணா படத்தில் வரும் மாணவர்கள் போல் எல்லோரும் மாற வேண்டும். ஏ.ஆர்.முருகதாஸ்





2011-ம் ஆண்டு தண்டி யாத்திரை பாதையில் நடைபயணம் மேற்கொண்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.




விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:-




என் குரல் எப்படி இருக்கும் என நானே முதன் முதலில் கேட்டது இந்த கல்லூரியில் நடைபெற்ற கலை விழாவில்தான். படிக்கும் போது, மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடங்கள் மட்டும் இன்றி நாட்டு நடப்புகளையும் எடுத்து கூறுவார்கள்.




3 ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றேன். நான் பார்த்த முதல் நகரம் திருச்சி. கல்லூரி படிப்பு காலத்தில் எனக்குள் இருந்த கூச்சம் எங்கே போனது என்று தெரியவில்லை.




தவறுகளை தட்டிக்கேட்கும் மனநிலை எனக்குள் உருவானது. தவறுகளை எதிர்த்து எப்படி போராடுவது என்று தெரியாத நிலை. எனவே ஒரு நக்சலைட்டாகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ ஆகலாமா? என்று கூட நினைத்தேன்.




2-வது உலகப்போரை நிறுத்தியது அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன்.




எனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்து வருகிறேன். காந்தி சென்ற பாதையில் சென்று வந்த மாணவர்கள் அவர் அடைந்ததை அடைய வேண்டும்.




எனது ‘ரமணா’ படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். ஊதியத்துக்கு பணி செய்வதை மட்டுமே லட்சியமாக கொள்ளாமல் சமுதாய கடமைகளையும் ஆற்ற முன்வர வேண்டும்.




இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment