Monday 10 December 2012

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! டி.டி.எச்., குறித்து கமல் ஆதங்கம்!!


Kamal statement on Vishwaroopam DTH release விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,-ல் வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் கமல், திருடனுக்கு 50 சதவீதம் கூட கொடுப்பார்கள் ஆனால் உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள் என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் டி.டி.எச்., முயற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம், இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி, தமிழ் சினிமாவை ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளை கடக்க வைக்கும் முயற்சி என்று ‌என்னை பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. டி.டி.எச்-ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஆனால் ஒரு சிலர் மட்டும் நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை

இந்த டி.டி.எச். என்பது என்ன எல்லோர் வீட்டிலும் இருக்கும் டி.வி. பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள், அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி. சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச்., இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதைவிடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சாட்சி.

இந்தி சினிமா வசூலுக்கு வழிவகுக்கும்

என்படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்க பலர் பெரிய விலைகளை சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்து சொல்லி கறுப்பு பண விளையாட்டை குறைத்து கொண்டால் 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

இந்தியாவில் அதிக விற்பனையான விஸ்வரூபம் ஆடியோ

ஒரேநாளில் விஸ்வரூபத்தின் இசை, இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு விஸ்வரூபம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது

டி.டி.எச்-ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்யேகக் காட்சி முடியும் போது படம் டி.டி.எச். கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது. விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது டி.வி-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

திருடனுக்கு கொடுப்பவர்கள் உடையவனுக்கு கொடுக்கமாட்டார்கள்

டி.டி.எச். வசதி தமிழக ஜனத்தொகையில் 3 சதவீதம் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் ஒன்றரை சதவீதம் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7.5 கோடியில் ஒரு சதவீதம் படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டி.வி.டி., வியாபாரி கொண்டு போவ‌தை தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டி.வி.டி-க் காரர்களுடன் கூட்டு சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டுவிட்டு நேர்மையான வியாபாரத்தை தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50 சதவீதத்தை கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த வாதத்தால் தியேட்டரில் வியாபாரம் குறையாது. வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்கு போவதைக் குறைத்து கொண்டதாய் தெரியவில்லை. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும், நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன..? பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளவே ஒரு சின்ன விளக்கம்.

முஸ்லீம்களை தவறாக சித்தரிக்கவில்லை

முடிவாக இந்தப்படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் இந்தப்படத்தை பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் வருந்தினால் மட்டும் போதாது, சகோதரனை சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லீம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அவ்வளவு பிரியா‌ணியையும் நான் ஒரு ஆளாக சாப்பிட முடியாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment