Thursday 10 January 2013

வெல்கம் டூ சினிமா! : 'அப்பா' அர்ஜூன்!



அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், விஷாலுக்கு ஜோடியாக 'பட்டத்து யானை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, பூபதி பாண்டியன் இயக்கி வருகிறார்.

அர்ஜுன் தனது மகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அர்ஜுன், ஐஸ்வர்யா, விஷால், இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அச்சந்திப்பில் அர்ஜுன் "நான் ஒரு நடிகராக, ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக உங்களை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் இச்சந்திப்பு எனக்கு மிகவும் புது அனுபவமாக இருக்கிறது. அதே சமயம் மிகவும் பெருமையாகவும் இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதே தமிழ் சினிமாவில் என் மகளையும் ஒரு ஹீரோயினாக அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சில நண்பர்கள் என் மகளை ஹீரோயின் ஆக்குவது குறித்து என்னிடம் பேசினார்கள். அவர்கள் " மகன் என்றால் கூட பரவாயில்லை.. உங்கள் மகளை ஏன் சினிமாவில் நாயகியாக அறிமுகப்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதைப் பொருத்துதான் நமக்கும் எல்லாம் நடக்கும். சினிமா தான் எனக்கு நல்ல பெயர், புகழ், பணம், அந்தஸ்து அனைத்தையும் கொடுத்தது. சினிமா என்பது எனது குடும்பம் மாதிரி, என் குடும்பத்துக்குள் என் மகளை அறிமுகப்படுத்துவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

என் மகளை ஒரு பெண் போல மட்டுமில்லாமல் ஒரு ஆண்போலவும் வளர்த்திருக்கிறேன். அதனால் எனக்கு பயமில்லை.

'பட்டத்து யானை' படத்தின் மூலம் எனது மகள் ஐஸ்வர்யா அறிமுகமாவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் நடித்த 'கிரி' படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் பூபதி பாண்டியன். ஆகவே அவருக்கு தெரியும் ஒரு படத்தின் வெற்றி எதில் இருக்கிறது என்று.

நான் இயக்கிய 'வேதம்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விஷால். அவர் இப்போது முன்னணி நாயகன். அவருடன் இணைந்து எனது மகள் நடிப்பது கூடுதல் சந்தோஷம் " என்றார்.

No comments:

Post a Comment