Thursday 10 January 2013

அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் !

மீண்டும் சசிகுமார் ஜோடியாக 'குட்டிப்புலி' படத்தில் நடித்து வரும் லட்சுமி மேனன், 'மஞ்சப்பை' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விமல் நாயகனாக நடிக்க, இயக்குனர் சற்குணம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இப்போதே திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி விட்டது.

'சுந்தர பாண்டியன்' வரவேற்பைத் தொடர்ந்து, லட்சுமி மேனனை பல்வேறு முன்னணி நாயகர்கள் தங்களது படங்களில் நாயகியாக ஒப்புக்கொள்ள அழைப்பு விடுத்து வருகிறார்கள். ஆனால் லட்சுமி மேனனின் சிந்தனை வேறுவிதமாக இருக்கிறது.

லட்சுமி மேனன் "ஒரு நல்ல நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்தேன். வந்த வேகத்தில் அதற்கேற்ற படங்கள் கிடைத்தன. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டேன். இனி முன்னணி நடிகையாக வேண்டும். அதற்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும்.

ஆனால் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் நடிக்க வேண்டுமென்றால் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும். கூடவே, முத்தக்காட்சி, அதிக நெருக்கம் என்றெல்லாம் காட்சி இருக்கும்.

எனக்கு அது சரிப்பட்டு வராது. அதனால்தான் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டேன். எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களின் எண்ணிக்கை கணக்கல்ல. கொஞ்ச காலம் நடித்தாலும் நல்ல படங்களில் நடித்துவிட வேண்டும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment