Monday, 10 December 2012

விஸ்வரூபம் டி.டி.எச். ரிலீஸ்! கமலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு!!

Producer council supports kamal decision on releasing Vishwaroopam in DTH  விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடும் கமலின் புதிய திட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பயங்கரவாதத்தை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாது ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை கமல் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார். அதற்கு முன்பாக தியேட்டரில் 8 மணி நேரத்திற்கு முன்பாக டி.டி.‌எச்.-ல் வீட்டிலேயே அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல் இப்படி செய்வதால் தியேட்டருக்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துபோகும் என்றும் இதனால் நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவோம் என்றும், இதனால் கமல் இம்முடிவை கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலின் இந்த முடிவை வரவேற்பதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சம்மேளனத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அனைவரும், கமலின் புதிய முயற்சியான டி.டி.எச்-ல் படத்தை வெளியிடும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களுடன் இன்னும் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்பிரச்னைக்கு விரைவில் முடிவு ‌எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கேயார் கூறுகையில், கடந்தாண்டு 129 படங்கள் ரிலீசானது. இந்தாண்டு 148 படங்கள் ரிலீசாகி உள்ளது. இதில் 8 படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ளது. அப்படி ஹிட்டான படங்களும் கூட சிறு முதலீடு படங்கள் தான். இன்றைய சூழலில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் செய்யப்பட்டு தியேட்டர் கிடைக்காமலும், வருவாய் பிரச்னைகளாலும் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அப்படி இருக்கையில் கமலின் இந்த முதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் கமலுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். நேரடியாக ஒருநாளில் படத்தை ரிலீஸ் செய்வதால், தியேட்டர் விநியோகம் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

பாரதிராஜா கூறும்போது, கமலை வைத்து 16 வயதி‌னிலே படத்தை எடுத்தபோது, அதில் அவரை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். இந்தபடம் எல்லாம் நன்றாக ஓடப்போகிறதா என்று ஏளனம் செய்தார்கள். எப்பவும் சோதனைகளை சாத‌னைகளாக்கி அதில் வெற்றி பெறுபவர் கமல். கமலின் இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இதனால் அனைவரும் பயன்பெறுவர். மேலும் இப்படியொரு முயற்சியால் ரசிகர்களை தியேட்டருக்கும் இழுத்து வர முடியும். பொதுவாக நான் இதுபோன்ற விஷயத்தில் தலையிடுவது இல்லை. ஒரு தயாரிப்பாளராக கமலின் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். ஆரம்பத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு தொலைநோக்கு பார்வையோடு இதனை பார்க்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களும் பெருந்தன்மையோடு கமலின் முடிவை ஆதரிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக மாநில அரசையும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிலிம் சேம்பர் உறுப்பினர் பிரசாத் கூறுகையில், நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக கமலின் முடிவை நாம் வரவேற்க வேண்டும். தயாரிப்பாளர்கள் அனைவரும் அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும். ஒருநாளில் ரிலீஸ் செய்வதால் தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment