ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் டிசம்பரில் ரிலீசாகிறது. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இப்படம் குறித்து சவுந்தர்யா அளித்த பேட்டி வருமாறு:-
நான் அப்பாவுக்கு அழியா புகழை தர விரும்புகிறேன். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நாடி நரம்புகளில் ஊடுருவியுள்ள ஒரு நடிகரின் ஸ்டைல்கள், மேனரிசம்கள், நடிப்பு ஆகியவற்றை நான் கம்ப்யூட்டரில் திரும்பவும் உருவாக்குகிறேன்.
ஆகையால் அனிமேஷன் படங்களுக்கே உரிய வாலுள்ள கதாபாத்திரங்கள், நெருப்பை கக்கும் விலங்குகள் என்றெல்லாம் இதில் எதுவும் இல்லை. அனிமேஷன் மேல் எனக்கு மிகப்பெறும் ஈடுபாடு உண்டு. அனிமேஷன் என்றாலே கார்ட்டூன் என்ற கருத்தை இந்தப் படம் உடைக்கும்.
இந்தப் படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மக்களை சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய ஒன்று. அவர் வெறும் உபதேசம் மட்டும் செய்வதில்லை. தத்துவங்கள்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார். தான் என்ன பிறருக்கு சொல்கிறோமோ அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, மொழி தெரியாத ஒரு மாநிலத்துக்கு வந்து அவர் இந்தளவு உயர்ந்திருக்கிறார். அவர் என்ன சொல்லணுமோ அதை வாழ்ந்தே காட்டிவிட்டார்.
ஜப்பானிஸ் உள்பட பல மொழிகளில் ‘கோச்சடையான்’ வெளியாக உள்ளது. பெரும்பாலும் இங்கிலாந்தில் ஷூட் செய்யப்பட்டாலும், இந்தியாவின் ஆன்மா படத்தில் இருக்கும். காட்சியமைப்புகள், காஸ்ட்யூம்கள், லொக்கேஷன்கள், பாடல்கள், நடனம் இப்படி இந்தியப் படங்களுக்கே உரித்தான பல பிரத்யேக அம்சங்களுக்கு படத்தில் குறைவில்லை. சொல்லப்போனால் ‘கோச்சடையானி’ல் பாட்டும், நடனமும் நிறையவே உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்