ரசிகர்கள் எனக்கு கோவில் கட்டுவதை கண்டிப்பாக நான் அனுமதிக்க மாட்டேன் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். சினிமாவில் வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு அவர்கள் மனதில் குடி கொண்டு இருக்கிறார் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகாவிற்கு மதுரை அருகே ரசிகர்கள் கோவில் கட்டட தயாராகி வருகிறார்கள். இதற்காக இடமெல்லாம் பார்த்து, கோவில் கட்ட நன்கொடையும் கூட வசூலித்து வருகின்றனர். கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்க உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஹன்சிகா கூறும்போது, ஒரு சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை சந்தித்து கோவில் கட்ட அனுமதி கேட்டனர். இப்படி அவர்கள் சொன்னதும் என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு புரிந்தது. ஆனால் அதற்காக கோவில் எல்லாம் கட்ட நான் அனுமதிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்படுவது தவறான செயல் என்று கூறியுள்ளார்.