தன் இரண்டாவது கணவர் ஆனந்தராஜிடமிருந்து விவாகரத்து கோரி நேற்று மனு செய்தார் நடிகை வனிதா. அவருடன் ஆனந்தராஜும் வந்து கையெழுத்திட்டார்.
நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவுக்கும், நடிகர் ஆகாஷூக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீ ஹரி (வயது 10), ஜோவிகா (7) என்ற குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.
பின்னர் ஆனந்தராஜன் என்பவரை வனிதா 2-வதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஜெய்னிதா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் விஜய் ஸ்ரீ ஹரி யாருடன் வாழவேண்டும் என்பதில் வனிதாவுக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பெரும் சண்டையே ஏற்பட்டது. பின்னர் பலத்த போராட்டத்துக்கிடையே அந்த பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டது. மகனுக்காக வனிதா தன் இரண்டாவது கணவரை உதறவும் முடிவு செய்தார்.
எனவே 2-வது கணவர் ஆனந்தராஜனுடன், வனிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் ஜெய்னிதா யாருடன் வாழவேண்டும் என்பது உள்ளிட்ட சில பிரச்சினையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததால், பரஸ்பரம் விவாகரத்து கோரும் மனு ஏற்கப்படவில்லை. தற்போது 2 பேரும் சமரசமாகிவிட்டதாகத் தெரிகிறது.
நேற்று மாலை சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு 2 பேரும் வந்திருந்தனர். பரஸ்பரம் விவாகரத்துகோரும் மனுவில் 2 பேரும் கையெழுத்திட்டு தாக்கல் செய்தனர். இந்த மனு, அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment