Thursday 12 July 2012

ரஜினி கொடுத்த 20 நிமிஷ ரீ-சார்ஜ்!




பிருத்விராஜ்... மல்லுவுட்டின் 'மோஸ்ட் வான்டட் ஹீரோ’... மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'ஹீரோ’ சூப்பர் டூப்பர் ஹிட். தமிழ், மலையாளம், இந்தி என சகல மொழிகளிலும் ரகளை பண்ணுகிறார்...
 ''இந்தியில் 'அய்யா’னு ராணி முகர்ஜியுடன் ஒரு படம் நடிக்கிறீங்களாமே... அதென்ன 'அய்யா’?''
''அது மராட்டிப் பொண்ணுக்கும் தமிழ்ப் பையனுக்குமான ஒரு காதல் கதை. ராணி முகர்ஜிக்கு என்னைப் பார்த்ததும் பிடிக்காது. ஆனா, நான் பக்கத்துல வரும்போது, என்னோட பிரத்யேக மணம்அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலயே ஊர் பேர் தெரியாத என்னைக் காதலிப்பாங்க. இந்தி சினிமாவின் இன்டெலிஜென்ட் இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் கதை. ரொம்ப சந்தோஷமா நடிச்சுட்டு இருக்கேன். 'அய்யா’ங்கிறது ஒரு பெயர். ஆனா, அதில்தான் இருக்குது கதையே!''
''தமிழ்ப் படங்களில் உங்களை இப்போ பார்க்கவே முடியலையே... ஏன்?''
''தமிழ்ல நான் கடைசியா நடிச்ச படம் 'ராவணன்’. டெஸ்ட் ஷூட்கூடப் பண்ணாம மணி சார் என்னை அவர் படத்தில் நடிக்கவெச்சது நான் சினிமா வுக்கு வந்ததுக்கான அர்த்தத்தை முழுமையாக்குச்சு. அதுக்கு முன்னாடி தமிழ்ல நான் நடிச்ச 'மொழி’, 'கனாக் கண்டேன்’, 'பாரிஜாதம்’ படங்கள் இப்பவும் சினிமா ரசிகர்களுக்கு பளிச்னு ஞாபகம் இருக்கும். அப்படியான படங்களில்தான் நடிக்க ஆசை. நல்ல படங்களில் நடிக்க முடியலைன்னாலும், மோசமான படங்கள்ல நடிக்கக் கூடாதுனு உறுதியா இருக்கேன் அப்புறம், என் அண்ணன் இந்திரஜித் தமிழ்ல நடிச்சிருக்கார் தெரியுமா? 'சர்வம்’, 'என் மன வானில்...’ படங்கள்ல என் சாயல்ல ஒருத்தர் நடிச்சிருப்பாரே... அவர் சாட்சாத் என் அண்ணன்தான்!''  
''சினிமாவில் உங்களால் மறக்க முடியாத பாராட்டு எது?''
''நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஆராதிச்சதைவிட இப்ப அதிகமா வியக்கும் ரஜினி சாரோட பாராட்டு! 'தளபதி’ படத்தில் ஒரு சீன் வரும்... அரவிந்த்சாமிகிட்ட 'தம்பி நீ போயிடு’னு ரஜினி சொல்வாரு. 'தம்பியா? என் அம்மா மட்டும் உன்னைப் பெத்திருந்தா அப்பவே குப்பைத்தொட்டியில வீசியிருப்பா’னு அரவிந்த்சாமி சொல்வார்... அப்போ ரஜினி சார் ஒரு ரியாக்ஷன் காட்டுவார் பாருங்க... சான்ஸே இல்லை! அப்படிப்பட்ட ரஜினி சார் 'மொழி’ படம் பார்த்துட்டு, அவரே என்னை போன்ல கூப்பிட்டு, இருபது நிமிஷம் பாராட்டிப் பேசிட்டே இருந்தார். நான் சினிமாவில் இருக்கிற வரைக்கும் அந்த ரீ-சார்ஜ் எனக்குப் போதும்.''  
''பாவனா, பிரியாமணினு கிசுகிசு கிளம்பினாலும் யாருமே எதிர்பார்க்காம சுப்ரியாவைக் காதல் திருமணம் பண்ணிட்டீங்க... அந்த ரகசியத்தை இப்பவாவது சொல்லலாமே?''
''என்.டி.டி.வி. ரிப்போர்ட்டரா இருந்த சுப்ரியா, 'நான் தென்னிந்திய நடிகர்களைப் பேட்டி எடுத்துட்டு இருக்கேன். உங்க அப்பாயின்மென்ட் வேணும்’னு போன்ல பேசினாங்க. அப்ப ஆரம்பிச்ச நட்பு. அவங்க பி.பி.சி. நிருபரான பிறகும் நல்ல டச்ல இருந்தோம். திடீர்னு ஒரு நாள் இவங்களை மிஸ் பண்ணவே கூடாதுனு தோணுச்சு. ராஜஸ்தான் ரத்தன்போர் காட்டுல வெச்சு சின்னதா ஒரு வைர மோதிரம் பிரெசன்ட் பண்ணி என் காதலைச் சொன்னேன். அவங்களும் காத்திருந்த மாதிரி ஓ.கே. சொல்லிட்டாங்க. ஒரு வருஷ கல்யாண வாழ்க்கை இப்போ அன்பும் காதலுமாப் போய்ட்டு இருக்கு. ஐ லவ் மை லைஃப்!''

No comments:

Post a Comment