Friday 13 July 2012

மாற்றான் எம்.ஜி.ஆர் படம் மாதிரி இருக்கும் - சூர்யா பேட்டி!


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஒருவர்களாக(ஒட்டிப் பிறந்த இருவர்) நடித்திருக்கும் படம் ‘மாற்றான்’. நேற்று(11.07.12) மாற்றான் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மாற்றான் படக்குழு பதில் கூறியது. மாற்றான் படம் பற்றி பேசிய கே.வி ஆனந்த் “ எந்திரன் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங் முடித்துவிட்டு ஷங்கர் சாருடன் விமானத்தில் வந்துகொண்டிருந்த போது, அங்கிருந்த ஜாகிரஃபி புத்தகத்தை எடுத்து படித்தேன். அதில் தான் லிங், சாங் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பற்றிய கவர் ஸ்டோரியை படித்தேன். 2009-ஆம் ஆண்டிலேயே சூர்யாவிடம் இந்த கான்செப்டை கூறினேன். அதன் பிறகு நானும் சூர்யாவும் தனியாக பல படங்களை செய்துவிட்டோம். ஒருநாள் சூர்யாவே வலுக்கட்டாயமாக ஃபோன் செய்து “ஆன்ந்த் சார் அந்த இரட்டையர்கள் கதை நம்ம பண்ணலாம் சார்” என்று கூறி மாட்டிக்கொண்டார். அந்த இரட்டையர்களின் கதைக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இந்த படத்தில் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ், வில்லத்தனம் எல்லாம் சூர்யா தான்.சூர்யா நடித்திருக்கும் இரட்டையர்கள் கதாப்பாத்திரமும் கதையின் கரு கிடையாது. அவர்கள் கதையை தாங்கிச் செல்லும் வித்தியாசமான கதாபாத்திரம். அவர்களுக்குப் பின்னால் ஓரு சமூகப் பிரச்சனை, பிரச்சனை வராத விதத்தில் அலசப்பட்டிருக்கிறது” என்று நக்கலாகவே பதிலளித்தார். சூர்யா பேசிய போது “ நான் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகி விட்டாலும் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவத்தை தந்தது. ஒரே காட்சியை இரண்டு முறை ஒரே மாதிரியாக செய்ய வேண்டும். அந்த காட்சிகளில் நான் கஷ்டப்பட்டதைவிட பீட்டர் ஹெயின் தான் கஷ்டப்பட்டார். இப்போது கிராஃபிக்ஸ் செய்துகொண்டிருப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் படத்தில் எப்படி ஒரு புதுமையும் பிரம்மாண்டமும் இருக்குமோ அதே போல் மாற்றானிலும் புதுமையும் பிரம்மாண்டமும் இருக்கிறது படத்தை நன்றாக அனுபவித்து பார்ப்பீர்கள். ஏனென்றால் கே.வி.ஆனந்தின் நக்கல்களும் படத்தில் அதிகமாக இருக்கிறது” என்று கூறினார்.

No comments:

Post a Comment