ரெயின்போ கிரியேஷன்ஸ் சார்பில் ஆண்டனி எட்வர்டு தயாரிக்கும் 'ஏன் இந்த மயக்கம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பிரபுதேவா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த கே.பாக்யராஜ் கலகலப்பாகப் பேசி அனைவரையும் கவர்ந்தார்.
கே.பாக்யராஜ் : "முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி எட்வர்டு நன்றிக்குரியவர். இந்தக் காலத்தில் யார் நடித்தால் படம் வியாபாரமாகும் என்று படத்துக்கு உத்தரவாதம் பார்ப்பார்கள்.புதுமுகங்களை வைத்து உருவாகும் இப்படிப்பட்ட படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம். இப்படிப்பட்ட தயாரிப்பாளர் வரும்போது, கொடுத்த வாய்ப்பை இயக்குநரும் மற்றவர்களும் காப்பாற்ற வேண்டும். அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொடுத்தால்தான் இன்றும் இவரைப் போல நிறைய பேர் வருவார்கள்.
இதை இயக்கும் ஷக்தி வசந்த பிரபு இயக்குநர் பிரபு தேவாவிடம் பணியாற்றியவர் என்பதை அறிந்து சந்தோஷம். இவ்வளவு பிஸியான நேரத்தில் பிரவு தேவா தன் உதவியாளருக்காக இங்கு வந்திருப்பதிலிருந்து எந்த அளவுக்கு ஷக்தி வசந்த பிரபு தன் இயக்குநரிடம் பெயர் வாங்கியிருக்கிறார் என்பது புரியும்.
படத்தின் தலைப்பைப் பார்த்ததும் பிரபுதேவாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. பிரபுதேவா இன்னும் பத்து வருஷம் தமிழ்நாட்டு பக்கம் வரமாட்டார் என்று சொல்கிறார்கள். அவரது மயக்கம் தெளிய வேண்டும். அவரது இயக்கத்தில் தமிழில் வருஷம் இரண்டு படங்கள் வரவேண்டும் "
பிரபுதேவா : " இந்த ஷக்தி வசந்த பிரபுவின் பெயர் என்னைப் பொறுத்த வரை கலை என்பதுதான். கலை... கலை என்றுதான் நான் கூப்பிடுவேன். இவர் பயங்கர உழைப்பாளி. இரவு பகல் என்று பார்க்காமல் கடுமையாக உழைப்பவர். அதை நேரில் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர் படமெடுத்திருக்கிறார். நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகள். மீண்டும் இப்படத்தின் வெற்றி விழாவில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் "
கதாசிரியர் பிரபாகர் : " இன்று புதுமுகங்களை வைத்துப் படமெடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அப்படி படமெடுப்பது பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து குதிப்பது போல... அப்படிப்பட்ட அசாத்திய துணிச்சல் கொண்டவர் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்."
தயாரிப்பாளர் அந்தோணி எட்வர்டு : " இப்படத்தை எடுப்பதே எங்கள் குடும்பத்தினருக்கு ரொம்ப நாள் கழித்து தான் தெரியும். இயக்குநரையே நீண்ட நாள் கழித்துதான் பார்த்தனர். நான் எப்போதாவது தான் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு சென்றிருக்கிறேன்."
இயக்குநர் ஷக்தி வசந்த பிரபு பேசும் போது பேச வார்த்தை கிடைக்காத மனநிலையில் இருந்தார். "எப்படி பேசுவது என்ன பேசுவது என்றே தெரியவில்லை" என்றவர், வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், வந்து வாழ்த்திய பிரபு தேவாவுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment