Saturday 16 June 2012

விஜய் வருத்தப்படுவார்-சீமான்

  பகலவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய், காரணம் சொல்லாமலேயே பின் வாங்கிவிட்டார். ஆனால் பின்னாளில் இந்தப் படத்தில் ஏன் நடிக்காமல் போனோம் என வருத்தப்படுவார், என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.
விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பது குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.
பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றார் சீமான். வேலூர் சிறையிலிருந்தபடி இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தார்.
கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்தப் படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.
இந்த நிலையில், சீமானும் வேறு நாயகர்களைத் தேட ஆரம்பித்தார். இப்போது ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.
பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.
நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்," என்றார்.
ஏற்கெனவே சீமான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற தம்பி படத்தில் விக்ரம்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பின் வாங்கியதால், அதில் மாதவன் நடித்து தனி மரியாதையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment